-
யார்சொல்லிக் கேட்டதிந்த உலகம்!
யார்சொல்லிக் கேட்டதிந்த பாரே –பெரி
யோர்சொற்கள் விழற்கிறைத்த நீரே!
யார்வழியில் நடந்ததிந்த பாரே –சிறி
யோர்போலே நடந்ததன்றி வேறே?
(யார்சொல்லிக்)
நூலறிவு வாய்த்தவர்சொல் எதையும் –கேட்டால்
நூதனமாய்ப் பார்த்தெள்ள விழையும்!
வாலறிவு வாய்த்ததுபோல் எதையும் –செய்து
வருந்திப்பின் துன்பத்தில் புதையும்!
(யார்சொல்லிக்)
மாயத்தில் மந்திரத்தில் அமிழும் –அந்த
மடமையினைச் சுட்டுவோர்மேல் உமிழும்!
தேயத்தைச் சீர்திருத்த விழையும் –எவரும்
தீண்டத்தகார் என்றுவசை பொழியும்!
(யார்சொல்லிக்)
ஆழ்கிணற்றின் தவளைகளாய் மக்கள் –இதை
அறிந்துரைப்போர் வாழ்வினிலே சிக்கல்
சூழ்ந்திழைக்கப் புகுமிவரா மக்கள்? –இல்லை
தோற்றத்தால் வளர்ச்சிபெற்ற மாக்கள்!
(யார்சொல்லிக்)
தானென்று தறுக்குவதில் நாட்டம் –என்றும்
தன்னலமே பேணிபொருள் ஈட்டும்!
மானமுள்ள பேர்களையே வாட்டும் –இந்த
வஞ்சகரின் பைந்நிறைய தேட்டம்!
(யார்சொல்லிக்)
வாய்நிறைய வாய்மையினை மொழியும் –நெஞ்சில்
வைத்துவளர் பொய்மையினால் இழியும்!
நாய்வாலாய் வல்லான்முன் குழையும் –ஏழை
நல்லாரை ஏய்த்திடவே விழையும்!
(யார்சொல்லிக்)
தன்மதமே பெரிதாமென் றார்க்கும் –பிறர்
தன்மதத்தின் வளர்ச்சிகண்டு வேர்க்கும்!
பொன்மனத்தைப் புதைகுழியாய் ஆக்கும் –இந்தப்
புல்லர்களால் தடம்புரளும் நாக்கும்!
(யார்சொல்லிக்)
அகரம்
more
-
பாயும் ஊகம்

கணப்பொழுது அடிமனதிற்
கருத்துடனே எடுத்திடுவாய்
நிணரத்தம் பாயும்பூமி
நித்தம் நித்தம் சாகும் மக்கள்
பணம் பதவி பார்த்திடாமல்
பைந்தமிழைக் காத்திடவே
குணக்குன்றாம் வீரன் நீயும்
குதித்தோடி வந்திடுவாய்
விளக்கற்ற இரவும்
விடியலற்ற கனவும்
வீறுகொண்ட மைந்தன் நீயும்
விடியல்தன்னை நோக்கித்தானே
வகுத்ததொரு பாதையிலே
வெற்றி நடை போடக்கண்டு
வெந்து நொந்தார் வீணரவர்
விழுப்புண்பெற்றாய் வீரன் நீயும்
அறுவடை செய்யும் தம்பின் களத்தில்
அரசியற் சாணக்கிய தம்பிமார்கள்
பொறுமையைத்தான் இளக்காத பொற்கொடிகள்
போர்தனிலே பாய்ந்து சென்று களமாடச்
சிறுமையே உருவான சிறுமதியோர்
சிதறுண்டோடிச் சின்னாபின்னம்
குறுநிலத்தின் மன்னனைபோற் தம்பி
கோலோச்சும் காட்சி என்னே!!!
ஆசை
more
-
அழுவதை நிறுத்துங்கள்

அழுவதை நிறுத்துங்கள்-இதை
உள்ளத்தில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
அழிவான் அழிவான் பகைவன்-அவன்
தமிழன் வாழ்வை அழிக்க நினைத்தால்.
அழிவான் அழிவான் பகைவன்.
நிமிர்வான் நிமிர்வான் தமிழன்-இவன்
பிரபாகரனின் வழியில் நிமிர்வான்.
புலிகள் நாங்கள் வெல்வோம்
உங்கள் விழிகளின் ஈரம்துடைப்போம்.
இது பிரபாகரன் காலம்
தமிழன் தலை நிமிர்வின் நேரம்.
இருளாய் இருக்கும் தமிழீழம்
தமிழன் மானப் போரின் தாய்ஈழம்.
இருளாய் இருக்கும் தமிழன் வாழ்வும்
நாளை விடியும் எங்கள் தமிழீழம்.
வாறான் வாறான் பகைவன்-அவன்
தமிழ் ஈழ மண்ணை ஆழ்வானா?
போறான் போறான் புலிவீரன்
தமிழீழம் மீட்கப் போராட.
ஈழம் ஈழம் தமிழீழம்-எங்கள்
தலைவன் காலத்தில் கிடைக்கும்.
சிங்கள ஈனர் படையணி அழியும்
இது வன்னி மண்ணில் நடக்கும்.
சிங்கள மூடர்கள் கொட்டம் அடங்கும்
தமிழன் மானப்போரில் பகைவன்
உடல்ல்கள் சிதறும்.
இது வன்னிமண்ணில் நிச்சயம் நடக்கும்.
சிங்களம் நிச்சயம்-தன்
சிதறிய உடல்களை சுமந்து
துட்டகைமுனு முன் குவிக்கும்-இது
வன்னிமண்ணில் நிச்சயம் நடக்கும்.
செ.சர்வன்
more
-
முள்ளிவாய்க்காலிலிருந்து...

ஒரு நூறு தெரு
தள்ளி தான்
கேட்கிறதந்த சப்தம்;
கண்ணீரால் யாரையோ
கூப்பாடு போட்டழைக்கும்
ஒரு ஓலம் அது;
சுலபமாய் சொன்னால்
மரணம் எனலாம்,
வாழ்பவன்
கற்றும் தெளியாத
அல்லது -
கற்காத பாடம்.
மரணம் என்றாலே
நெஞ்சை உலுக்கும் பயத்திற்கு
மரணமின்றியே இயங்குகிறது
நிறைய சதைகள்;
ஆம், ஜாதி பேசி
மதம் பேசி
இனம் பேசி
ஏற்றத் தாழ்வு பேசி
யாரை கொன்றேனும்
சுயநலம் காக்கும் சதைகளாக தானே
வாழ்கிறோமென சொன்னால்
எத்தனை பேர் ஏற்பீர்களோ
எத்தனை பேர் மறுப்பீர்களோ;
மறுக்க உங்களுக்கு
சுதந்திரமுண்டு -
ஏற்க எனக்கு மனமில்லை - நீங்கள்
சதைகளே;
சதை குவிந்த ஒரு பிண்டமே;
வேண்டுமெனில்
பிணமென்றும் வைத்துக் கொள்ளுங்கள்.
டேய்........, யாரையடா
பிணமென்றாய்' என
விரட்டி பின்னால் ஓடுகிறேன்..
என்னை விட வேகமாக ஓடி
முட்கம்பிகளை தாண்டி
முள்ளிவைக்காளின் ஒரு
ரத்தக் கரை படிந்த பாறைக்குள் சென்று
மறைகிறதந்த உருவம்!
வித்யாசாகர்
more
-
தாய்மண் மீது உறுதி

கண்களை கசக்குவதால்
காலத்தை கடிந்து கொள்ளமுடியுமா.
காலமிட்ட கோலமென
கலங்கிப்போக முடியுமா.? எம்
ஒவ்வொருதுளி கண்ணீருக்கும்
வரலாற்று ஈரமுண்டு
வரண்டு நீ போகாதே.
சரித்திரப்புரிசர்கள் சங்கமிப்பது அழிவதற்கல்ல.
நீண்ட வரலாறு கொண்டவர்கள் நாம்
அதை நினைவில் வைத்திரு.
முள்ளிவாய்க்கால் தமிழருக்கு
முற்றுப்புள்ளி என்கிறது சிங்களம்.
எதுவும் முடிந்துவிடவில்லை அங்கு
சிங்களத்தின் சாவுமணித்தூணின்
அத்திவாரமது. எம்
கண்ணீரை உரமாக்குகின்றோம்.
கருகிய நாட்களுக்கு
குறுகிய நாட்களில் பதில்வரும்
நாளை நமதே நாடு நமதே.
சோகம் அறவே. ஈழம்வருதே.
என புதுப்பல்லவி பாடு.
கண்களை குத்திவிட்டு
கனவுகாண முடியாது.
எம் இனம் எம் நிலம்
அடிமைப்பட்ட சரித்திரம் கிடையாது
நாம் சறுக்கிவிழவில்லை
எம் சரித்திரத்தை சுறுட்டிவிட
விரிக்கப்பட்ட சதிவலையிது.
கதைமுடிவில் சரித்திரம் படைப்பது
யாரென்பது புரியும்.
விலை கொடுத்து வாங்கிய வீணர்களுக்கு
விசம் கொடுத்து வளர்க்கின்றாய்
இனம் என்பதை மறந்து
உன் நிழலுக்கு படுகுழி தோண்டுகின்றாய்.
காலத்தின் தீர்ப்புக்கு நீ
தப்பிக்கொள்ள முடியாது.
இன்றும் சரி என்றும் சரி
உன்கணக்கு பிழையானது.
தீவுக்குள் முடங்கிவிட்டோம்
தீர்வுக்குள் அடங்கிவிட்டோம். என
பெருமிதம் கொள்ளாதே.
நாடுகடந்த நாரைகள் நாம். உன்
கூரையில் ஓர்நாள் கல்லெறிவிழும்
போர்த்திறன் தெரியாதவகள் என
எம்மை கேலி செய்கின்றாய்.
களம்கண்டு கலங்காத எம்
கருமணிக் குஞ்சுகள்
பிணமெனக் குவிந்தது அங்கே.
மனம் வந்து கொன்றாயோ
மாந்தைகள் ஆட்டம். அங்கே
மௌனித்த துப்பாக்கிகள்
மறுவெடி தீர்த்திருந்தால்
உன் கெதி எப்படி.
கோழையே...........
கொன்றது நீ வெல்வது நாம்
எம் மௌனம் வானத்தை இடித்து
மின்னலாய் வந்து விழும். அப்போ
உன் தலை தெறிக்கும்.
புலி உயிர்த்தஞ்சம் கேட்டதில்லை
சாவுக்குப் பயந்ததில்லை
யாருக்கும் அடிமையில்லை
பகையென்றால் விடுவதில்லை
மண்டியிட்டால் தொடுவதில்லை
குழிபறித்தால் மன்னிப்புக்கு இடமில்லை
கூடவே இருந்துவிட்டால்
யாருக்குமே அச்சமில்லை.
உன் நெஞ்சுக்கு துணிவிருந்தால்
நேருக்குநேர் நின்றுபார்.
உயிர்தப்பி ஓடினோர் எத்தனை பேர்
அவர்களை கேட்டுப்பார்.
யாரடா நீ எனக்கு வேலிபோட
ஏனிந்த மௌனமென பொறுத்திருந்துபார்
நாளைக்கு நீ எம் எல்லையில் காவல்நிற்பாய்.
புலிக்கொடி வானில் பறந்து
வான்முகிலை அதட்டிப்பேசும்
இடிமின்னலும் அடங்கிப்போகும்
நாம் காத்திருப்பது காலத்தின் பிச்சைக்காகவல்ல.
எம் தலைவனின் வார்த்தைக்காக. அவன்
வார்த்தை எம் சுதந்திரத்தின் திறவுகோல்
அதுவரை நாம் ஓய்வதுமில்லை சோர்வதுமில்லை.
இது தமிழ்த்தாய் மண்மீது உறுதி.
புவியாதவன்
more
-
தமிழ்த் தலைவன் வருவான் நம்பு

உலகத் தமிழரின் உன்னதம் பிரபா!
கலகம் கலைக்கும் அவதாரம் பிரபா!
இன்னல் தீர்க்கும் இனியவன் பிரபா!
சுயநலம் இல்லா அதிசயம் பிரபா!
ஆனது ஆகட்டும் போனது போகட்டும்
தலைவன் வருவான் நம்பு.
தமிழ்த் தலைவன் வருவான் நம்பு
கனவுகள் அவனுக்கு தமிழ் ஈழம்
நினைவுகள் தினமும் எம் மக்கள்
வெற்றிகள் அவனது அடையாளம். (இவனே)
இலட்சிய பாதையின் இடு கோடு.
ஆனது ஆகட்டும் போனது போகட்டும்
தலைவன் வருவான் நம்பு.
தமிழ்த் தலைவன் வருவான் நம்பு
ஊட்டிய உணர்வால் உயர்ந்தவர் நாம்
காட்டிய பாதையில் ஈட்டிய வெற்றிகள்
வாட்டிய வேதனை வழி மாற. ஆடிய
நாட்டியம் நயம் இழந்து போனதெங்கே?
கட்டியம் கூறிய கரி காலன்
கட்டிய கோட்டையில் நரிக்கூட்டம்.
பட்டியல் போட்டு படு கொலை (இருந்தும்)
கூட்டுக்குள் மீண்டும் தமிழ்ப் படை.
ஆனது ஆகட்டும் போனது போகட்டும்
தலைவன் வருவான் நம்பு
தமிழ்த் தலைவன் வருவான் நம்பு
உலகம் முன் சுருங்கிய உண்மை
சிங்களம் முன் நொருங்கிடும் திண்ணம்.
வதங்கிய தமிழர் மனங்களில் இன்று
நெருங்கியே வருகுது பேரின்பம்.
ஆனது ஆகட்டும். போனது போகட்டும்
தலைவன் வருவான் நம்பு.
தமிழ்த் தலைவன் வருவான் நம்பு.
தயாநிதி
more
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




